Friday, December 4, 2009

நான் ரசித்த காதல் கவிதைகள்


* என்னுடையது என்று நினைத்துத்தான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.

* துடிப்பதைவிட உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

* எனது இரண்டு தோள்களுக்கும் இடையே
பெரும் சண்டை நடக்கிறது உன்னால்
“என்னாலா . . . என்ன சண்டை?” எனது எந்தத் தோளில்
நீ முதலில் சாய்வாய் என்கிற பந்தயச் சண்டை

* எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய்.

* 'நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே
உன் கண்கள்.

* என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது உன் மௌனம்.
ஆனால் உன்னைக் காதலிக்க
ஆரம்பித்தபோதே பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது மனசு. எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை.

* இவை இப்படித்தான் என்று நான்
நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி
விடுகிறாய். உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான் என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை பொய்யாக்கிவிடுகிறதே.

* ஒரு கார்த்திகை இரவில் அகல்
விளக்குகளுக்கு நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ... உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.


தபுசங்கர்



No comments: